கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 1: Kavikko

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 1: Kavikko

editor2's podcast

07/06/2008 7:12PM

Episode Synopsis "கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 1: Kavikko"

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில்:- தமிழக முதல்வர் கலைஞரின் 85 -வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புக் கவியரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன்.இந்தக் கவியரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் 4ந்தேதி மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. கவியரங்கத்துக்கு கவிக்கோ.அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தார். வைரமுத்து, மு.மேத்தா, ஆண்டாள் பிரியதர்ஷ்னி, பேரா.செல்வகணபதி, மு.கருணாநிதி ஆகியோர் கவியரங்கில் பங்கேற்றனர். தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்களை ஒரே மேடையில் பார்ப்பதற்கு கூட்டம் அதிகமாகவே கூடியிருந்தது . நிறையப் பேர் அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கவியரங்கத்தை தொடங்கினார் கவிக்கோ. கலைஞருக்கு முதுகு வலி, நெஞ்சு வலி ஏன் வந்தது என்பது பற்றி சிறப்பாக ஆரம்பித்தார். குழாயடிச் சண்டைபோல் அழைத்து வரப்பட்ட மக்களின் சத்தம் அதிகமாகவே இருந்தது. "இங்கு ஒரு அரங்கம்; அங்கு ஒரு அரங்கமா? என கவிக்கோ சிறிது கோபப்பட்டார். இச்சசூழலில் மீண்டும் சலசலப்பு. ' கவனம் யாருக்கும் இங்கே இல்லையே...' எனக் கவிதையை நிறுத்திவிட்டு கூட்டத்தை நோக்கினார் அப்துல்ரஹ்மான். அப்பொழுது திடுதிடுவென சபாரி உடை அணிந்த உயரமான மனிதர்கள் கைகளில் வாக்கி டாக்கியுடன். முன் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர்களிடம் ஏதோ முணுமுணுக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எழுந்து வெளியே வருகிறார்கள். கவியரங்கம் நிறுத்தப்படுகிறது. மேயர் மைக்கில் அறிவிக்கிறார் 'கவியரங்கத்தைக் காண நம் தமிழக முதல்வர் வந்து கொண்டிருக்கிறார்" என்று. கூட்டம் ஆச்சரியத்துடன் விசிலடிக்கிறது. கலைஞர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக எந்த முன் அறிவிப்புக்களும் கிடையாது. திடீரென வீட்டிலிருந்து தனது மகள் கவிஞர் கனிமொழியைக் கூட்டிக் கொண்டு கவியரங்கத்துக்கு வந்து விட்டார். 85 வயது என்று காலம் கணக்குப் பார்த்துச் சொல்கிறது. கட்டாயம் ஓய்வு தேவை என மருத்துவ அறிக்கை கூறுகிறது.. நடந்தால் சாய்ந்து கொள்ள இரண்டு தோள்கள் தேவைப்படுகிறது. இதை எல்லாம் பொருட்படுத்தாமல் தமிழ் மீது கொண்ட காதலால் அந்த தமிழ்த்தேர் அசைந்து…அசைந்து அரங்கத்துக்குள் வந்த போது, கூட்டம் வாழ்க என்ற கோஷத்துடன் நீண்ட நேரம் கை தட்டி உற்சாகப்படுத்தியது. முன்பு இருந்த சலசலப்புக்களை எல்லாம் நீக்கி விட்டு கூட்டம் அமைதி காத்தது. கவிஞர்கள் முகத்திலும் ஏக சந்தோசம். வாசிக்கப் போகும் கவிதயை தாம் நேசிப்பவரே கேட்கும் வாய்ப்புக் கிடைத்தால் கவிஞர்கள் சந்தோசப்படாமல் என்ன செய்வார்கள்! கவிக்கோ மீண்டும் ஆரம்பித்தார். "என் கவிதை உனக்கு பூச்சொரியும்: ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம். முதுகு வலிக்கிறது உனக்கு.. வலிக்காதா... எத்தனை காலம்தான் எங்களை சுமக்கிறாய். ஒரு நாள் தமிழிடம் முகவரி கேட்டேன் - அது மே/பா மு.கருணாநிதி என்றது. இரட்டை இலை விரித்து நாட்டையே உண்டவர்களை எச்சில் இலையாக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தாய் நீ. நட்சத்திர ஆட்சியை இனி இந்த நாடு தாங்காது. சில நட்சத்திரங்கள் நாட்டை ஆள ஆசைப்படுகிறது... தமிழா விழித்துக் கொள்... வெள்ளித் திரை ஆட்சிக்காக உன் வேட்டியும் உருவப்படாலாம்....” என்று ஏக கைதட்டல்களுடன் கவிதையை முடித்தார் கவிக்கோ.

Listen "கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 1: Kavikko"

More episodes of the podcast editor2's podcast